Sunday, March 21, 2010

Share

துளிர் விட்ட காதல்...

அவன் நெஞ்சத்தீயில்
வஞ்சகர்கள் விதைத்த
துரோகச்செடிகளின் இடையே- இந்த
வஞ்சியின் காதல் துளிர்த்தது....!

கொஞ்ச மல்ல
கொடுஞ்சொற்கள்
உற்றவர்கள் வீசியவை...!
அத்தனையும்
பூச்செண்டின் புறவிதழ்களாய்
மாற்றியது அந்த
சுந்தர தேவதையின்
மந்திர வார்த்தைகள்!

சொல்லால் அடிபட்டு
சுருண்டு கிடந்தவனை
நீட்டி முழக்கி
நர்த்தனமிட வைத்தது
அந்த
புன்னகைப்பூவின்
முத்துப் பொழியலும்
முகவிலாச தரிசனமும்!

அங்கம் அரவணைக்கும்
அவள் சங்கமம்
கங்கையின்
புனிதக்குளியலாய்
அவனைப்
புதுப்பித்து வைத்து
புன்னகைக்க வைத்தது!

இனி அவனுக்கு
வதைத்து மாய்த்திடும்
பிரிவுகள் இல்லை
உருக்குலைத்திடும்
துன்பமும் இல்லை...
அவனது உல்லாசக்கூவல்
இதனைக் கூறுவது
கேட்கிறதா...........?

''இறைவா...
இனியொரு பிறவி
எனக்கினிவேண்டிலேன்...
அதுவே விதியெனின்
அவள்பாதக்கொலுசின்
ஓர்முத்தாகிட
வரம் வேண்டும்...!''


0 comments: