Tuesday, January 24, 2012

Share

காதலே...


கண்களில் சிறைப்பட்டு
இதயத்தில் உயிர் பெற்று
நினைவுகளில் படர்ந்து
பரிதவிக்கும் காதலே
வந்த வழியே
மீண்டும் செல்வாயோ?

முட்களில் உறங்கும் 
இதயக் கூட்டில்
உனக்கேது வேலை இங்கு?
நேற்று வரை இல்லாத 
தவிப்புகளை என்னில்
தொடரலையாய் 
ஏற்படுத்தும் உன்னை
அரவணைக்கும் எண்ணமில்லை. 

சிந்தனையை கலைத்து 
சிதறடிக்கும் உன்
உன்னத உணர்வால்
சீர்குலைகின்றது 
என் வாழ்க்கை..

ஆயுதமின்றி
எனை தாக்கும் உன்னை
தாக்கும் பிடிக்கும் தைரியம்
என்னிடம் இல்லை.
நிம்மதி நிலை குலைந்து
நிர்கதியாக நிற்கும்
என்னை விட்டு ஓடு..

நாளைய பொழுதுகள்
எனக்காகவும் விடியலாம்
அன்று சந்திக்கலாம்.
அதுவரை
நினைவுகளை மட்டும்
எனதாக்கி விட்டு செல்
காலமெல்லாம்
நானாகவே வாழ்ந்திடுவேன்.

Friday, January 20, 2012

Share

தவிக்கிறேன்


நடக்க நினைக்கிறேன்
பாதை எங்கும் இருளாக
உறங்க நினைக்கிறேன
படுக்கையெல்லம் முட்களாக
வாழ நினைக்கிறேன்
எங்கும் சூனியமாக
அன்பைத் தேடுகிறேன்
எல்லாம் ஏமாற்றமாக
திசைகள் இன்றி
தவிக்கும் படகு போல
தவிக்கிறேன் நானும்
தனிமரமாய்....

Saturday, January 14, 2012

Share

பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

பழையன கலைந்து
புதியன அணிய
வந்திடும் திருநாளாம்
தைப்பொங்கல்.

வேர்வையினை உழைப்பாக்கி
நம் உண்ண உணவளிக்கும்
உழவனுக்கு விழா எடுக்கும்
பெருநாளாம் இன்று..

பூமியின் அசைவுக்கு மட்டுமன்றி
மனித மனங்களின்
இருளை போக்க
உதித்திடும் சூரிய தேவனுக்கு
நமஸ்காரம் செலுத்திடும்
திருநாள் இன்று

பானைகளில் பொங்கிடும்
நுரை போல
மனித மனங்களில் என்றும்
இன்பம் பொங்கி வழிந்திட
தமிழர் தாயகமெங்கும்
செழுமை பொங்கிட
வாழ்த்துகின்றேன் நானும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....